திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.19 திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் பண் - காந்தாரபஞ்சமம் |
எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.
|
1 |
மையகண் மலைமகள் பாக மாயிருள்
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே.
|
2 |
மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே.
|
3 |
இரவுமல் கிளமதி சூடி யீடுயர்
பரவமல் கருமறை பாடி யாடுவர்
அரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்
மரவமல் கெழில்நகர் மருவி வாழ்வரே.
|
4 |
சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கண்நல் இறைசெய்த கோயில் சேர்வரே.
|
5 |
கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்
சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே.
|
6 |
இகலுறு சுடரெரி இலங்க வீசியே
பகலிடம் பலிகொளப் பாடி யாடுவர்
அகலிடம் மலிபுகழ் அம்பர் வம்பவிழ்
புகலிடம் நெடுநகர் புகுவர் போலுமே.
|
7 |
எரியன மணிமுடி இலங்கைக் கோன்றன
கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே.
|
8 |
வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்
பொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்
செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே.
|
9 |
வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே.
|
10 |
அழகரை யடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடையமுடி நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |